ஆணும் ஆணும் குழந்தை பெறுவதை விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?
ஆணும் ஆணும் குழந்தை பெறுவதை விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?
- சந்திரகௌரி சிவபாலன்
ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவுகள் உயிரினங்களிடையே காணப்படுகின்றன. இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன்று கலந்து பரம்பரை அமைப்பு முறையைப் பேணுகின்றன. காதல், காமக் கவர்ச்சி என்பன இருபாலாரிடையே ஏற்படும் உணர்வு எனக் காலம் காலமாக எமது பண்பாடு கற்பித்தது. இதை மீறிய உறவுமுறைகளைத் தற்போது பல உலக நாடுகள் சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளமையை அறிகின்றோம். இதன் மூலம் தமது வாரிசுகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதனையே இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.
தற்போது பால் இனம் என்பது இல்லை. மனிதர் என்னும் இனம் மட்டுமே உள்ளது. உறுப்புக்களைக் கொண்டு பால் கவர்ச்சியுள்ள LGBTQ என்றும் Rainbow Society என்றும் அழைக்கப்படும் இன மக்களும் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்தி உலகமெங்கும் வாழுகின்றனர். இது பற்றி எல்.ஜி.பி.ரி.கியூ என்னும் நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.
பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வதும் காமம் கொள்வதுமான பண்பையுடையவர்கள் லெஸ்பியன் (Lesbian) என்றும் ஆணும் ஆணும் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருப்பவர்கள் கே (Gay) என்றும், ஆண் பெண் இருபாலாரிடமும் பாலுணர்வு கொண்டவர்கள் பைசேக்சுவல் (Bisexual) என்றும், பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் உள் உணர்வுரீதியாக ஆண்கள் தம்மைப் பெண்ணாகவோ பெண்கள் தம்மை ஆணாகவோ நினைத்து வாழ்பவர்கள் ற்ரான்சென்டர் (Transgender) அதாவது திருநங்கை திருநம்பி என்றும், பாலியல் அடையாளம், அல்லது பாலின அடையாளம் (gender identity) பாரம்பரிய வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட பாலினப் பிரிவுக்குள் அடைக்க விரும்பாமல் கியுவர் (Queer) என்றும் தம்மை அடையாளப்படுத்தி வாழுகின்றார்கள். இவர்களை விட காதலிலோ, காமத்திலோ நாட்டமில்லாத (aromantic) என்பவர்கள் Questionin, Interse, Asexual, Aromantic, Pansexual, Non - Binary of Envy, Genderqueer, Agender, Stud, Muke, MaHu, Hetaro sexism, Cisgender போன்ற பிரிவுகளும் இருக்கின்றன.
திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தையே ஐயப்பர் எனப் புராணக் கதை கூறுகின்றது. திருமால் மோகினி அவதாரம் எடுத்துத் தாரக வனத்துக்கு முனிவர்களின் தவத்தைச் சோதிப்பதற்காக வந்தபோது சிவன் திருமாலில் மோகம் கொண்டு சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்த குழந்தையே ஐயப்பர் என புராண வரலாறு கூறுகின்றது. திருமால் மோகினியாக மாறியது ர்ரான்சென்டர் என்றே கருத வேண்டும். இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பது கேள்விக்குறி? சமூகத்திலே இவ்வாறான பால் பிரிவுகள் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிவிப்பதாக இக்கதை உணர்த்துகின்றது.
பழங்குடி மக்களிடமும் ஆதி மனிதரிடமும் இருந்த முறை தவறிய காதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவரவே பண்பாடுகளும் கலாசாரங்களும் உருவாகின. அவை மனித உணர்வுகளுக்கு கட்டுப்பாட்டை விதித்து வாழ்க்கையின் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இல்லாமல் செய்கின்றன என்று தற்கால தலைமுறையினர் வாதிடுகின்றனர். காலம் காலமாகத் தம்மைக் கொன்று சமூகத்தின் பார்வைக்காக எத்தனையோ ஆண்களும் பெண்களும் இவ்வுலகில் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள். மனிதர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள் என முழக்கமிடுகின்றனர். மேலை நாடுகள் இவற்றுக்குத் தலைசாய்த்து இச்சமூகத்தினரை ஏற்கத் தொடங்கிவிட்டனர்.
‘கே’ எனப்படும் ஆணும் ஆணும் இணைந்து ஒரு சிசுவை உருவாக்க முடியுமா?
கர்ப்பம் உருவாக விந்து (sperm) + முட்டை (egg) + கருப்பை (uterus) தேவை. ஆண்களிடம் விந்து மட்டுமே இருக்கும். முட்டையும் கருப்பையும் இல்லை. வேறு மூன்று வழிகளில் பிள்ளையை இவர்கள் பெற முடியும்.
n சரோகசி (Surrogacy):
ஓர் ஆண் தனது விந்துவை ஒரு பெண்ணின் முட்டையுடன் (donor egg) இணைத்து மற்றொரு பெண்ணின் கருப்பையில் (surrogate mother) கர்ப்பமாக வளர்க்கலாம். பிறந்த பிள்ளை சட்டப்படி அவர்களின் பிள்ளையாக இருக்கலாம் (நாட்டின் சட்டத்தைப் பொறுத்து). இந்த முறையில் குழந்தைகளைப் பெற்றெடுக்க வழிமுறை உண்டு.
n தத்தெடுப்பு (Adoption):
பல நாடுகளில் ஆண்-ஆண் தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி உள்ளது. குழந்தைக்கு பெற்றோர் அன்பு, பாதுகாப்பு கிடைப்பதே முக்கியம். மனிதருடைய வாழ்க்கையில் அதிகூடிய வாழ்நாட்கள் 100 வருடங்கள் ஆயின். அதன்பின் இந்தப் பூமியிலே அவர்கள் மீண்டு வரப் போவதும் இல்லை. தம்முடைய வாரிசுக்கு எவ்வித புத்திமதிகள் கூறி வழிநடத்தப் போவதும் இல்லை. மரணம் அப்படியே அவர்கள் வாழ்க்கையைக் கரைத்து விட்டுப் போகும். தம்முடைய வாரிசுகளும் காலப்போக்கில் அனைத்தையும் மறந்து விடுவார்கள். உலகுக்கு உயிரைச் சிறந்த முறையில் வளர்த்தெடுத்து ஒப்படைப்பதே மனிதரின் கடமை அதனைக் ‘கே’ யினரும் செய்யலாம். இம்முறையிலே குழந்தையைத் தத்தெடுத்து ‘கே’ இன மக்கள் வளர்ப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
n எதிர்கால அறிவியல் (இன்னும் ஆராய்ச்சியில்):
ஆண் செல்களிலிருந்து முட்டை உருவாக்குவது போன்ற ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் இது இன்னும் நடைமுறையில் இல்லை. ஆண்களின் உடலுக்குள் கருப்பை வளரச் செய்ய வேண்டும். செல்களை உற்பத்தி செய்ய வேண்டும். சில ற்ரான்ஸ் மென் ஹார்மோனை (testosterone) நிறுத்தித் தங்களுடைய கருப்பையில் இயல்பாகவோ IVF மூலமாகவோ கர்ப்பம் தரித்து பிள்ளை பெற்றிருக்கின்றார்கள்.
இயற்கைக்கு மாறாகப் பல விடயங்களைச் செய்துகாட்ட விஞ்ஞானம் முயற்சி செய்துகொண்டு இருக்கிறது. ஆனால், சமய நிறுவனங்களும் நாட்டு அரசினரும் தடை செய்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், இந்த இயற்கைக்கு மாறான விடயங்களால் பாதிப்புக்களை எதிர்நோக்கலாம் என்கின்றனர். உதாரணமாக ஒரு உயிரின் மரபணு (DNA) அப்படியே நகலாக இன்னொரு உயிரை உருவாக்கும் குளோனிங் முறை வெற்றியடைந்தது.
குளோன் செய்ய வேண்டிய உயிரிலிருந்து (உதா: செம்மறியாடு, மாடு) தோல் செல் போன்ற சாதாரண உடல் செல் எடுக்கப் படுகிறது. அந்த செல்லுக்குள் முழு DNA இருக்கும். அதன்பின் மற்றொரு பெண் உயிரின் முட்டை செல் (egg cell) எடுக்கப்படும். அதில் இருக்கும் நியூக்ளியஸ் (DNA) முழுவதும் அகற்றப்படும். இப்போது அது காலியான முட்டையாகின்றது. இப்போது DNA இடமாற்றம் நடத்தப்படுகிறது. முதல் உயிரின் உடல் செல்லிலிருந்து எடுத்த நியூக்ளியஸ் இந்த காலி முட்டை செல்லுக்குள் வைக்கப்படும். சிறிய மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படும்போது அந்த செல்லானது ‘நான் கருவாக வளர வேண்டும்’ என்று நினைத்துப் பிரிவடைந்து வளரத் தொடங்குகிறது. உருவான கரு (embryo) ஒரு சரோகேட் தாயின் கருப்பையில் வைக்கப்படுகிறது. அது பின் சாதாரண கர்ப்பம் போல வளர்ந்து பிறக்கிறது. இவ்வாறு உருவான முதல் குளோன் பாலூட்டி 1996-இல் ஸ்காட்லாந்தில் பிறந்த செம்மறியாடு ‘Dolly’. இதுவே குளோனிங் உலகத்தை மாற்றியது.
எனவே எதுவும் சாத்தியம். மனித உடலும் செல்களினால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ என்றால் நம்ப மறுக்கும் மனம். ஆனால் அதுவும் உண்மையே. மூளையின் செயற்பாடு நின்றுவிட்டால், எமது இதயம் தொழிற்பட மறுத்தால் ரோபோக்களைத் திருத்துவது போலத் திருத்திச் செயற்பட முயற்சி செய்வோம். முடிந்தால் எம்முடைய இயந்திர உடல் தாங்கி சிறிது காலம் ஆயுளை நீட்டிப்போம். ஒருநாள் அனைத்தும் நிற்க. வெறும் சாம்பலாவோம்.
செல்களை உருவாக்கிச் செயற்படுத்தி உறுப்புகளை வளர வைக்கும் விஞ்ஞானம் கருப்பையை உருவாக்க முயற்சிக்க மாட்டாது என்று ஏன் நம்ப மறுக்கின்றோம். அமெரிக்காவில் ஓர் ஆண் குழந்தையைக் கருவில் சுமந்தார் என்று பல செய்திகள் வெளியாகின. அவர் Trans men ஆக இருந்திருக்கின்றார். பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்து பின் மனத்திலும் அடையாளத்திலும் ஆணாகத் தன்னை மாற்றி வாழ்ந்தவர் என்பது தெரிய வந்தது.
முடிவாக வேகமாக முன்னேறிவரும் விஞ்ஞானம் எதிர்காலத்தில் இதனையும் சாத்தியப்படுத்தலாம். நாம் நினைத்துப் பார்க்காத பல சாதனங்களை விஞ்ஞானம் நடத்திக் காட்டி இருக்கின்றது.
Gay தம்பதிகள் பிள்ளை பெறுவது, வளர்ப்பது என்பதை மூன்று கோணங்களில் - மதம், அறிவியல், சமூகப் பார்வை:
n மதத்தின் பார்வை:
மதங்களில் ஒரே மாதிரி கருத்து இல்லை. பெரும்பாலும் பாரம்பரிய விளக்கங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.
4 இந்து மதம்:
பாரம்பரியமாக திருமணம் என்பதில் ஆண் + பெண் என்ற கருத்தே வலுவாக உள்ளது. ஆனால் புராணங்களில் பாலின வேறுபாடு, மூன்றாம் பாலினம், பாலின மாற்றம் போன்ற குறிப்புகள் இருக்கின்றன (அர்த்தநாரீஸ்வரர், சிகண்டி). Gay பிள்ளை வளர்ப்பு பற்றி நேரடி தடை எதுவும் இல்லை. ஆனால் சமூக நடைமுறை மத விளக்கத்தைவிட கடுமையாக இருக்கிறது.
4 கிறிஸ்தவம்:
பெரும்பாலான தேவாலயங்கள் Gay உறவுகளையும் அதில் குழந்தை வளர்ப்பையும் ஏற்க மறுக்கின்றன. சில நவீன / லிபரல் சர்ச்சுகள் (Europe, US) same-sex parenting-ஐ ஏற்றுக்கொள்கின்றன.
4 இஸ்லாம்:
Gay உறவுகள் பெரும்பாலும் பாவமாகவே பார்க்கப்படுகின்றன. அதனால் Gay தம்பதிகள் பிள்ளை பெறுவது, வளர்ப்பது மத ரீதியாக ஏற்கப்படுவதில்லை.
மொத்தத்தில் மதங்கள் பெரும்பாலும் பாரம்பரிய குடும்ப அமைப்பையே முன்னிலைப்படுத்துகின்றன.
n Gay பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள்:
Gay பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள் மனநலம், கல்வி, சமூக இவை எல்லாவற்றிலும் சாதாரண பெற்றோரின் குழந்தைகளுக்கு சமமாகவே இருக்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் வளர்ப்பில் குழந்தைக்குத் தீங்கு ஏற்படும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. குழந்தைக்கு அன்பு, பாதுகாப்பு, நிலையான சூழல் போன்றனவே முக்கியம். பெற்றோரின் பாலினம் முக்கிய காரணம் இல்லை. ஒரு குழந்தைக்கு மிக முக்கியமானது ‘யார் பெற்றோர்?’ அல்ல, ‘எப்படி பெற்றோர்?’ என்பதே.
முடிவாக காதல் என்பது பிள்ளை பெறும் திறன் அல்ல. காதல் என்பது குடும்பம், பெற்றோர் என்பவை பல வடிவங்களில் இருக்கலாம். ‘கே’ க்களின் திருமணங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மனித உருவாக்கம் குறையும் என்னும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. ஆனால், மனிதர்களில் சாதாரணமான மக்களும் இருக்கின்றார்கள்; ரெயின்போ சமூகத்தினரும் இருக்கின்றார்கள். எனவே மனித இனம் அழிந்துபோகச் சாத்தியக் கூறுகள் இல்லை. ஆணும் ஆணும் இணைந்து குழந்தை பெற் றெடுப்பதை எதிர்காலமே பதில் கூறும்.
நன்றி
